இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகள் வழங்கப்படாமை, மிகவும் ஆபத்தானது ….

 
Stephen Rapp
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகள் வழங்கப்படாமை, மிகவும் ஆபத்தானது என்று யுத்தக்குற்றங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் விசேட தூதுவர் ஸ்டீவன் ரெப் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற 37வது மனித உரிமைகள் மாநாட்டின் உபகுழு கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

கடந்த காலங்களில் குற்றங்களைப் புரிந்த பலர் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமை அதிகம் உள்ளது.

அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் போன்றோர் பாரிய அளவில் மனித உரிமை குற்றங்களில் ஈடுபடுகின்ற போதும், அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்படுவதில்லை.

இதன் விளைவுகளாலே முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத தாக்குதல்கள் உள்ளிட்ட பல வன்முறைகள் இடம்பெற்றன.

குற்றங்களைப் புரிந்துவிட்டு தப்பிக் கொள்வதற்கான வழிகள் இருக்கின்றன என்பதை வன்முறையாளர்கள் அறிந்திருக்கின்றனர்.

இந்தநிலைமையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தண்டனை வழங்கப்படாமை மிகப்பெரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Intl Lawyer Richard Rogers
 
குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதன் ஆபத்துக்களை இலங்கை தெளிவாகக் காட்டுகின்றது என பன்னாட்டு சட்டவாளர் றிச்சர்ட் ஜே றோஜெர்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு சுயாதீனமாக இயங்கி வரும் இலங்கையின் நிலைமாறுகால நீதிச்செயற்பாடுகளைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழு வின் (Sri Lanka Monitoring and Accountability Panel. MAP) ஒருங்கிணைப்பாளராக றிச்சர்ட் செயற்படுகின்றார்.

மேலும், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யும் கம்போடிய கலப்பு நீதிமன்றத்தின் சட்டவாளராகவும் றிச்சர்ட் காணப்படுகின்றார்.

இந்நிலையில், இலங்கை தொடர்பில் அவர் விசேட கருத்துக்களை முன்வைத்து வருகின்றார், இலங்கை விவகாரம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் உள்ள நிலைமை குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்படுவதன் ஆபத்துக்களைத் தெளிவாகக் காட்டுகின்றது, அதாவது பெருமளவிலான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் சித்திரவதையும் பாலியல் வன்செயலும் இப்போதும் திட்டமிட்ட அமைப்புசார் குற்றங்களாகவே இருப்பது, இது இலங்கை அரசாங்கம் செயல்படுத்தும் வன்ம உத்தியின் பகுதி என்றே எண்ணச் செய்கிறது.

மனித உரிமைப் பேரவை இலங்கையின் நிலைமையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பும் படி, ஐ.நா பாதுகாப்பு சபை எடுத்துரைக்க வேண்டும்.

இது இலங்கையில் பாதிப்புற்ற மக்களுக்கும் பொறுப்புக்கூறல் கோரும் மனித உரிமைக் காவலர்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதாக அமையும் எஎன சுட்டிக்காட்டியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*