நான்காவது அரசவைக்கான தேர்தலுக்கு தயாராகும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

Link: https://samugammedia.com/transnational-government-of-tamil-eelam-tgte-prepares-for-elections-to-the-fourth-provincial-council-1709018802 நான்காவது அரசவைக்கான தேர்தலுக்கு தயாராகும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

Transnational Government of Tamil Eelam

தாயகம், தேசியம், தன்னாட்சி இறைமை எனும் அடிப்படை நிலைப்பாடுளின் வழிநின்று, ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல், இராஜதந்திரப் போராட்டங்களை, ஜனநாயக வழியில் முன்னெடுத்து வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தனது நான்காவது அரசவைக்கான தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் யாப்புக்கு அமைய, மூன்றாவது அரசவைக்காலம் 2024 பெப்ரவரி 17ம் நாளுடன் நிறைவு பெற்றது.

2009ம் ஆண்டு பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்திருந்த சிங்கள இனநாயக அரசு, தமிழீழம் என்ற தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பினை இல்லாதொழிக்கும் கனவுடன், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தலைமையில் நிறுவப்பெற்றிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை அழித்திருந்தது.

இச்சூழலில் இதற்கான பதிலடியாக தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக 2010ம் ஆண்டு மே 18ம் நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது உலக ஜனநாயக வெளியில் தோற்றம் பெற்றிருந்தது.

தமிழீழத் தனியரசை வென்றெடுக்கும் இலட்சிய நோக்குடன், இனவழிப்புக்கான ஈடுசெய்நீதி, அரசியல் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்பு, தேசக்கட்டுமானம் எனத் தனது செயல் வழிப்பாதையினை வரித்துக் கொண்டு மூன்று அரசவைகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில் அரசவை உறுப்பினர்களின் பரிந்துரைக்கு அமைய நான்காம் அரசவைக்குரிய தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணையர்களை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையாளராக திரு.ரஞ்சன் மனோரஞ்சன் ( அமெரிக்கா).துணை ஆணையாளர்களாக திருமதி அனோஜா முத்துசாமி (பிரித்தானியா), இரு. ரமேஷ்ராமகிருஷ்ணன் (அவுஸ்ரேலியா) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலிசியா ஆகிய பிராந்தியங்களில் நாடுவாரியாக புலம்பெயர் நாடுகளில் தேர்தல் இடம்பெற இருக்கின்ற நிலையில், அந்தந்த நாடுகளுக்குரிய தேர்தல் ஆணையாளர்களது விபரங்கள், தேர்தல் நடைபெறும் திகதி, மற்றும் தேர்தல் தொடர்பான விபரங்கள் தேர்தல் ஆணையாளரால் விரைவில் அறிவிக்கப்படும்.

பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தங்கள் கருத்துக்களை இங்கு தரப்பட்டுள்ள election.commission@tqte.org என்ற மின்னஞ்சல் வழியே தெரிவித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்து வந்த பாதையை இரும்பிப் பார்க்கும்போது, அது உருவாக்கம் பெற்ற காலத்திலேயே அதனை கருச்சிதைவு செய்வதற்கு சிறிலங்கா அரசும், வேறு பல சக்திகளும் இணைந்து செயற்பட்டமை நினைவில் வருவதாக மூன்றாவது அரசவையின் இறுதி அமர்வில் உரையாற்றும் போது தெரிவித்திருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன், அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த 14 வருடங்களாக நிலைத்து நிற்கிறது என்றால் மக்களின் ஆதரவும், தமிழர் தேசத்தின் பெருவிருப்பான தமிழீழம் என்ற நிலைப்பாட்டில் ஓர் அங்குலம் கூட விட்டுக் கொடுக்காத செயற்பாடுமே இதற்கான காரணங்கள் ஆகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோற்றம் பெற்ற காலத்தில் (2010) இருந்து ஒவ்வொரு மாதமும் தவறாமல் அரசவை கூடுவதையும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அமைச்சரவை கூடுவதையும் சுட்டிக்காட்டிய பிரதமர் வி. உருத்திரகுமாரன் இதற்காக உழைத்த அனைத்து அரசவை உறுப்பினர்களுக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், கடந்த அரசவைக்காலத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடைகள் தொடர்பாக அமெரிக்கா, பெரிய பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளில் சட்டப் போராட்டங்களை மேற்கொண்டது.

இப்போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழ்நாட்டில் கூட்டங்களை நடத்துவதற்கு எதிராக இருந்த நிலைப்பாட்டிற்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடர்ந்து வெற்றியும் கண்டது.

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு, பாலஸ்தீன பிரச்சனைகள், தற்போது நடைமுறையில் இருந்து வரும் பொறிமுறைகள் மற்றும் நியதிகள் வலுவிழந்து இருப்பதை கருத்தில் கொண்டு, உலக சமாதானத்திற்கும், நீதிக்கும், புதிய பொறிமுறைகள், புதிய நியதிகளை, உலக சிவில் சமூகத்தையும் சேர்த்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினை, இந்து சமுத்திர புவிசார் அரசியலுடன் இணைந்து இருப்பதால் ஈழத் தமிழர் தேசத்தை இந்து சமுத்திர அரசியலில் ஒரு தரப்பாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றது.

மேலும், ஈழத் தமிழர் தேசிய பிரச்சனைக்கு மனித உரிமைகளின் அடிப்படையில் பொது வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு சர்வதேச ஆதரவு தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

தமிழீழத் தனியரசை உருவாக்கும் முயற்சிக்கு உலகத்தமிழர்களின் பொருளாதாரப் பலத்தை அரசியல் பலமாக்குவதற்காகத் துணை செய்யும் வகையில் தமிழீழ வைப்பகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றது.

2008 ஆம் ஆண்டு தேசியத் தலைவர் தனது மாவீரர் உரையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து நிற்கும் புலத்தில் வாழும் இளைய சமுதாயத்தினை உற்சாகப்படுத்திக் கருத்து வெளியிட்டிருந்தார்.

புலம் பெயர் நாடுகளில் வாழும் இளம் சமுதாயமும் பெண்களும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் கூடுதல் அளவில் இணைந்து மாவீரர்களின் தமிழீழக் கனவை நனவாக்க அர்ப்பணிப்புடனும், அறிவாற்றலுடனும் செயலாற்ற முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

       

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*