14/03/2024
யேர்மனியில் நான்காவது தவணைக்கான வேட்பு மனுதாக்கல் மார்ச்19 முதல் ஆரம்பம் – ஜேர்மனிய நா.க.த அரசாங்கத்தின் தேர்தல்ஆணையம் அறிவிப்பு!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவைக்கான தேர்தல்கள் 05.05.2024ல் நடைபெறவிருக்கும் நிலையில் யேர்மனியில் நடைபெறும் தேர்தல்கள்.
2010ம் ஆண்டு யேர்மனியில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்கான தேர்தல் ஆணையர் அவர்களின் பரிந்துரை அடிப்படையில், யேர்மனியின் 16 மாநிலங்களில் பரந்து வாழும் தமிழ் மக்களின் குடிப் பரம்பலை அடிப்படையாக வைத்து, யேர்மனியை 4 பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு, இவ் நான்கு பிராந்தியங்களும் 4 தேர்தல் மாவட்டங்களாக இனங் காணப்பட்டிருந்தன. அதனடிப்படையில் யேர்மனியிலிருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கு 10 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில் இத் தேர்தல் மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் குடிப் பரம்பலுக்கேற்ப அம் மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தீர்மானிக்கப்பட்டிருந்தன. அந்தவகையில் தேர்தல் மாவட்டங்கள் பின்வருமாறு:
- Berlin, Brandenburg, Mecklenburg-Vorpommern, Sachsen, Sachsen-Anhalt, Thuringen – 1 பிரதிநிதி
- Bremen, Hamburg, Niedersachen, Schieswig-Holstein – 2 பிரதிநிதிகள்
- Nordrhein – Wesfalen – 4 பிரதிநிதிகள்
- Hessen, Saarland, Rheinland-Pfalz, Bayern, Baden–Wurttemberg – 3 பிரதிநிதிகள்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவைக்கான தேர்தல்கள் 05.05.2024ல் நடைபெறவிருக்கும்நிலையில் அத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் berlintamil@web.de என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அதற்கான விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். 19.03.2024ம் திகதி முதல் 15.04.2024 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இரா. பாஸ்கரன்
தேர்தல் ஆணையர், யேர்மனி.